இந்தியன் ஆயில் நிறுவனம், வரும் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் மாதத்துக்கு 2 மில்லியன் பேரல்கள் கூடுதலாக கச்சா எண்ணெய் வாங்க சவுதி அராம்கோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா கடந்த 2018-ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் ஈரான் மீது பொருளாதார நடவடிக்கை விதித்தது. இதை அடுத்து அமெரிக்கா, ஈரானுடனான வர்த்தகத்தை பிற நாடுகள் தொடர்ந்தால், அந்த நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் இந்தியாவும் தற்போது அமெரிக்காவுக்கு இணங்குவது போல் ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொண்டது.
இந்நிலையில் சவுதியை சேர்ந்த சவுதி அராம்கோ நிறுவனம் 5.6 மில்லியன் டன் எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து, இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த சவுதி அராம்கோ என்ற நிறுவனத்திடம் கச்சா எண்ணெய் வாங்கப்போவதாகவும், மாதத்திற்கு 2 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் கூடுதலாக இறக்குமதி செய்ய உள்ளதாகவும், இந்த அதிகரிப்பு ஈரான் மீதான அமெரிக்க பொருளாதாரத் தடைகளை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குனர் ஏ.கே.சர்மா கூறுகையில், சவூதி அரேபியாவில் இருந்து இந்த 2019-20 நிதியாண்டிற்கான கூடுதலாக 5.6 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதை அடுத்து, வரும் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் மாதத்துக்கு 2 மில்லியன் பேரல்கள் கூடுதலாக கச்சா எண்ணெய் வழங்க அந்நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது" என்று தெரிவித்தார்.